கோவில் நுழைவு வாயில்களில் ஒளிக்காட்சி மூலம் சன்னதி, பூஜை மற்றும் சேவைகள் விவரம் காட்டப்படும்- அமைச்சர் தகவல்

216 0

பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோவில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களின் தல வரலாறு, கோவிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் தற்போதைய நிலையில் பேனர்கள், கல்வெட்டுக்கள் மூலம் காட்சிபடுத்தப்பட்டு வருகின்றது.

ஒருங்கிணைந்த திருக்கோவில் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கோவில்களின் அனைத்து விவரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. எனவே இத்திட்டத்தின் ஒரு அங்கமாக கோவில்களின் தல வரலாறு, திருக்கோவிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக் கலை சிறப்புகள் முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோவிலின் நுழைவு வாயில்களில் விளக்கக் காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கோவில்களில் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மெய்நிகர் காட்சி மூலம் கோவில் தொடர்பான விவரங்களை காட்சிபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் காட்சிப்படுத்த வேண்டிய விவரங்கள் கோவிலின் அமைவிட வரைபடம் மற்றும் இணையதள விவரங்கள், கோவிலின் தொலைபேசி எண்கள், தொடர்பு நபர்களின் தொலைபேசி எண்கள், பயண வழிதடங்கள் அதற்கான வசதிகள் (பேருந்து, ரெயில், விமானம்), கோவிலின் தற்போதுள்ள முழுக்காட்சி கோவில் புராண வரலாறு (சுருக்கம்), கோவில் தல வரலாறு (சுருக்கம்), கோவிலின் வரைபடம் நுழைவு, வழிகாட்டி விவரம், கோவிலின் சன்னதிகள், முக்கிய பிரார்த்தனைக்கான சன்னதிகள் பூஜை விவரம், நாள், தேதி, நட்சத்திரம் போன்றவை இடம்பெறும்.

கோவிலின் சிறப்புகள் திருவிழாக்கள், கல்வெட்டுத் தரவுகள், சிற்பம் மற்றும் ஓவியக்கலை குறித்த தகவல்கள், கோவிலின் விழாக்கள் மற்றும் தேதி, நட்சத்திரம், திதி முதலியவை, கோவிலின் அருகிலுள்ள திருக்கோவில்கள் அதன் சிறப்பு சுருக்கம், முதன்மை கோவிலில் இருந்து அருகிலுள்ள கோவிலுக்கான வழித்தட வசதிகள் (பேருந்து மற்றும் பிற வசதி), கோவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் மக்கள் நல திட்டங்கள் விவரம், (கோ சாலை, யானைகள் பராமரிப்பு, அன்னதானம், கருணை இல்லம், பயிற்சிப்பள்ளிகள், கல்லூரிகள், புத்தகங்கள் விற்பனை, பிரசாத விற்பனை, தங்கும் விடுதி வசதி, இணையதள சேவைகள் விவரம் போன்றவை இடம்பெறும்.

நடை திறப்பு, நடை சாத்தும் நேரம், கோவில் தொலைபேசி எண்கள், விடுதி வசதி போன்றவற்றிற்கான தொடர்புடைய நபர்களின் கைபேசி, தொலைபேசி விவரம், மக்கள் தொடர்பு அலுவலர் இருப்பின் அவரின் கைபேசி விவரம் குறித்து அடியோட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலமாக விளக்க ஒளிக்காட்சியில் வெளியிடப்பட வேண்டும்.

மேற்கண்ட விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோவில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.