வீதியில் செல்ல முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது – ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கவலை

266 0

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை முன்வைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளதால் வீதியில் செல்ல முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைககையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பொது மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு நிலையான தீர்வை அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும்.அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களை வரவேற்று,தவறான தீர்மானங்களை விமர்சிக்கும் கொள்கையுடன் பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து செயற்படுகிறோம்.

எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அரசாங்கம் சிறந்த தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விரைந்து செயற்படாவிடின் மக்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்களா என்பது சந்தேகத்திற்குரியது.

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத அவல நிலைமை அரசியல்வாதிகளுக்கு தோற்றம் பெற்றுள்ளது என்றார்.