பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைவிட முற்றாக நீக்கப்பட வேண்டும்:!!

281 0

பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதை விட முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத் தொடரிலும் ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்தது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவது போல பொறுப்பு கூறல் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விடுவித்து சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கிய ஒரு சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளுக்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் இந்த கூட்டத் தொடரிலும் காத்திரமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் வேதனையான விடயம்.

தொடர்ந்தும் பொறுப்பு கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருப்பதற்கு அரசாங்கமும், அரசாங்கத்துக்குச் சார்பான சில சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களினுடைய, பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து செயல்படுவது ஒரு கவலைக்கிடமான விடயம். இந்த பொறுப்பு கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்குவதனால் ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் எந்த விதமான தீர்வோ, நீதியோ கிடைக்கப்போவது கிடையாது.

எங்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கான பொறுப்பு கூறுகின்ற அந்த விசாரணையானது முற்று முழுதான ஒரு சர்வதேச விசாரணையாகச் சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்திலே நடைபெற வேண்டும்.

அல்லது குறைந்தபட்சம் ஒரு விசேட தீர்ப்பாயமாவது அமைக்கப்பட வேண்டும். அதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைத் தரும். ஒரு போதும் குற்றவாளிகளை நீதிபதிகளாகக் கொண்ட உள்ளக விசாரணையின் மூலம் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை.

அதேவேளை கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலே இலங்கையிலே இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற மாதிரியான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான எந்த விதமான காத்திரமான நடவடிக்கைகளும் இன்றுவரை இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகின்ற சீர்திருத்தம் கூட மேற்பார்வைக்குத் திருத்தங்களைச் செய்தது போல் தெரிந்தாலும் பயங்கரமான, தீவிரமான, சிறுபான்மை மக்களை, தமிழ்த் தேசிய இனத்தை, பாதிக்கக்கூடிய சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையே நாங்கள் அவதானிக்க முடிகிறது.

ஆகவே அந்த திருத்தங்கள் கூட பூரணமானவை அல்ல. எங்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவது என்பதைக் காட்டிலும் அது முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத்தமிழ் மக்களது நிலைப்பாடாக இருக்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.