தனியார் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி

266 0

பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றிலேயே இவ்வாறு பௌத்த விகாரை கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தீகவாபி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் வந்த குழுவினரே இவ்வாறு பௌத்த விகாரையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பௌத்த பிக்குகள் அடங்கிய அந்தக் குழுவினருக்கு, சிவில் உடையில் வந்த பொலிஸார் உள்ளிட்ட படையினர் பாதுகாப்பு வழங்கினர்.

குறித்த இடத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோரும் சமூகமளித்திருந்ததோடு, பொதுமக்களுடன் இணைந்து, அவர்களும் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இங்கு ஊடகங்களிடம் பேசிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்´; “கட்டுமான வேலையொன்றை ஆரம்பிப்பதாயின் பிரதேச சபையிடம் முறையான அனுமதியொன்றைப் பெறவேண்டும். ஆனால், இந்த விகாரையினை அமைக்கும் பொருட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் எந்தவித அனுமதிகளும் பெறப்படவில்லை” என்றார்.