மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

436 0

மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்றிலேயே ஒரு லட்சியத்துக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு நடத்திய அறவழி அமைதிப் போராட்டம், இதுபோல் இதுவரை நடந்தது இல்லை என்று உச்சிமீது மெச்சத் தகும் விதத்தில் மாணவர்களின் மெரினா புரட்சி தமிழர்களின் ஜல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாக்க நடைபெற்று, வெற்றியும் ஈட்டியது.

தமிழர் நாகரிகம், உரிமைகள் குறித்த உணர்வுகள் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக ஏங்கித் தவித்தேன். அது இன்றைய மாணவர் சமூகத்தில் வளர்ந்திருப்பதை எண்ணி என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. ஆனால், ஆறு நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களை எண்ணி வேதனைப்படுகிறேன்.

அரசின் அறிவிப்பை ஏற்க மாட்டோம். ஜல்லிக்கட்டு தடை நீங்கியது என்ற அரசின் அறிவிப்பை கடந்த காலத்தைக் கருதி ஏற்க இயலாது. சரியான உத்தரவாதம் கிடைக்கும்வரை எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறுவதற்கும், போராடுவதற்கும் ஜனநாயகத்தில் மாணவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அவர் களை கட்டாயப்படுத்தி பலாத்காரத்தைப் பிரயோகிப்பது, வலுக்கட்டாயமாக காவலர்கள் தூக்கிச் சென்றது நியாயமல்ல.

இந்த அறப்போராட்டத்தின் குறிக்கோளையே சிதைக்கும் வகையில், அதன் பெருமைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பிரதமரையும், முதல்-அமைச்சரையும் எழுத்தில் பதிக்க முடியாத அருவருப்பான வார்த்தைகளால் வசைபாடியோரையும், அறப்போர்க்களத்துக்குள் ஊடுருவி வன்முறைக்கு தூபம் இட்டவர்களையும், அவர்களின் பின்னணியிலிருந்து ஏவிவிட்டவர்களையும் தக்க புலன் விசாரணையின் மூலம் கண்டறிந்து, சாட்சியங்களோடு நிலை நாட்டி, அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறையின் பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. சில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும். ஆனால், அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் காவல் துறையினரே வாகனங்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி வாட்ஸ்அப்பில் ஆதாரப் பூர்வமாக வெளிவந்துள்ளது.

அந்தக் காவலர்கள் மீதும், தவறு செய்யாத மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீதும் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஆறு நாட்களும் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் உற்ற நண்பர்களாகவே செயல்பட்டனர் என்பதும், கைகளில் துப்பாக்கியும், லத்திக் கம்பும் இல்லாமல் பல இடங்களில் போராட்டக்காரர்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டியதும் பாராட்டுக்குரியவை ஆகும். ஆனால், வெண்மைத் திரையில் கரும்புள்ளி என ஒன்றிரண்டு சம்பவங்கள் காவல்துறையினரின் நன்மதிப்புக்கு பங்கம் விளைத்தது.

நடந்து முடிந்த அறப்போரில் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் இயக்கியவர்கள் அனைவர் மீதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.