தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு- பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

214 0

ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களில் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து 30 ஆகவும், குல்பி ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80-ல் இருந்து ரூ.100ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது என்கிற தகவலை 24மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்றைய (03.03.2022) தினம் ஆவின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.