மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் பேசுகிறார் டிரம்ப்

338 0

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு தொலைபேசியில் உரையாடுகிறார்.

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான இன்று இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ளார்.

டொனால்டு டிரம்பின் இன்றைய பணிகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நேரப்படி  இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் இந்த உரையாடல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு இதுவரை நான்கு வெளிநாட்டு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள டிரம்ப் 5-வது வெளிநாட்டு தலைவராக மோடியுடன் பேசவுள்ளார்.

பதவியேற்ற மறுநாள் (ஜனவரி 21) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்யூ மற்றும் மெக்ஸிகன் அதிபர் பெனா நீட்டோவுடன்  தொலைபேசியில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அதனைத் தொடர்ந்து நேற்று எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை டிரம்பு தொடர்பு கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.