காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

288 0

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா முருகன் ஆலயத்தில் வழிபாட்டை ஆரம்பித்த பின்னர் ஊர்வலமாக வவுனியாவில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலைக்கு முன்பாக சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில்,

அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்ளூர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனயீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை.

ஆகவே எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? உயிருடன் இருந்தால் அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?

உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின் அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.