நுவரெலியா ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை, பிறமாவட்ட மக்கள், வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை அப்பகுதி கிராம சேவகர் ஒருவர் கண்டுக்கொள்வதில்லை என எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசிகள் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹட்டன் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பட்டத்தில், நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலை பகுதியில் பருவகால நிகழ்வின்போது, வருகைதரும் வெளியார்கள் பொது இடங்கள் மற்றும் அரச காணிகளை ஆக்கிரமித்து கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த காணி ஆக்கிரமிப்புக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம சேவக அதிகாரி ஒருவர் வெளியார்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
இது தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் பல்வேறுபட்ட முறைபாடுகளை செய்துள்ள போதிலும், நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை நல்லதண்ணி பிரதேசத்தில் காணப்படும் அரச காணிகள் மற்றும் பொது இடங்களில் வெளியார்கள் ஆக்கிரமிக்கும் இடங்களில் உள்ளுர் அரச அதிகாரிகள் ஏதாயினும் ஒரு வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க இடங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவ் இடங்கள் தமக்கு சொந்தம் என வெளியிடவாசிகள் தெரிவிக்கின்றனர் எனவும், இவ் இடங்களை வெளியிடவாசிகள் எந்த ரீதியில் உரிமைகொள்ள முடியும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
எனவே தமது பகுதி கிராம அதிகாரி தமது பிரதேசத்திற்கு வேண்டாம் எனவும் கோஷமிட்டு பதாதைகளை ஏந்தி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அப்பிரதேச மக்கள் முன்னெடுத்தனர்.