ஏறாவூரில் மூன்று பெண்கள் கைது!

191 0

மட்டக்களப்பு ஏறாவூரில் பூரணை தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று புதன்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 வீடுகளை பொலிசார் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 21 கால் போத்தல் மதுபானம் போத்தல்களுடன் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து இன்னும் ஒரு வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரிடமிருந்து 22 கால் போத்தல் மதுபானங்களுடன் அவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் 3,350 மில்லி கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .