இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்…

177 0

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இன்று (13) பிற்பகல் மூன்று மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் நேற்றிரவு கடற்படையினர் கைது செய்திருந்தனர்

குறித்த 12 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்திய போதே இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்கு தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர். இவர்கள் 12 பேரும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.