அரிசி மாஃபியாவிற்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

247 0

பொலன்னறுவை அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகள் ஏதும் இல்லாத போது நல்லாட்சி அரசாங்கம் 2014 இல் 600,000 மெற்றிக் தொன் அரிசியும், 2015 இல் 286,000 மெற்றிக் தொன் அரிசியும், 2016 இல் 29,000 மெற்றிக் தொன் அரிசியும், 2017ம் ஆண்டு 745,000 மெற்றிக் தொன் அரிசியும், 2018இல் 249,000 மெற்றிக் தொன் அரிசியும் இறக்குமதி செய்திருந்தது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2020ம் ஆண்டு 16,000 மெற்றிக் தொன் அரிசியே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரிசி இறக்குமதி நடவடிக்கையானது, அரிசி மாபியா நுகர்வோரை சுரண்டுவதைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியின்றி அனைத்தையும் இறக்குமதி செய்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.