2022 இல் இலங்கையின் சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் : கிமர்லி பெர்னாண்டோ

360 0

கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் ஆசிய பிராந்தியத்தில் பயணிக்கக்கூடிய பாதுகாப்பான நாடாக இலங்கையை உலக சுற்றுலாப் பேரவை (WTC) பெயரிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவியான கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 50 வீதத்தை எட்டுவோம் என எதிர்பார்க்கிறோம். அதாவது 2018 ஆம் ஆண்டில் இலங்கை 2.3 மில்லியன் வருகையைப் பதிவு செய்துள்ளது. 2022 இல் அதில் அரைவாசியை அடைவதே எங்கள் இலக்கு என்றும் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மீண்டு எழுச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், கடந்தாண்டு நவம்பரில் 44,294 பேர் வந்ததாகவும், டிசம்பரில் கிட்டத்தட்ட 90,000 பேர் வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் கொவிட்-19 தொற்றை விஞ்ஞான ரீதியில் நிர்வகிப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் காண முடியும். விரும்பிய இலக்குகளை அடைவதற்கு SLTDA ஒரு விரிவான வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது.

இலங்கையின் இணையற்ற இயற்கை வளங்களையும் இலங்கை மக்களுக்குள் பொதிந்துள்ள கலாசாரத் திறனையும் விஞ்ஞான ரீதியாக ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை விரைவாக ஈர்க்க நடவடிக்கை எடுப்பதே இதன் பிரதான நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மீண்டும் வந்துவிட்டது, சுற்றுலாப் பயணிகளுக்காக நாங்கள் திறந்துள்ளோம். கொவிட் தொற்றுக்குப் பின்னர் பயணிகள் தேடும் அனைத்தும் நம் நாட்டில் உள்ளன. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு நிம்மதியான பயணத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் விருந்தோம்பலின் அரவணைப்புடன் உங்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.