வவுனியா வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு

189 0

வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது.

எதிரக்கட்சித்தலைவரின் வடக்கிற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இன்று (07) வவுனியாவிற்கு வருகை தந்த அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு 24 இலட்சம் பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு தொகுதியைக் கையளித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ உபகரண தொகுதிகளில் 35 ஆவது வைத்தியசாலையாக வவுனியா வைத்தியசாலைக்குக் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன், புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் உமா சந்திரபிரகாஸ், வன்னி மாவட்ட அமைப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவருக்கு வைத்தியசாலையினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இதேவேளை,வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் சிமாட் வகுப்பறையும் இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.