பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

205 0

பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், ராமேசுவரம் மீனவர்களில் ஒரு பகுதியினர் 7-வதுநாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் 55 பேர் கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் உடனடியாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமேசுவரம், மண்டபம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 69 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம், மண்டபம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை .

அவர்களது விசைப்படகுகள் அனைத்தும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது. வருகிற 31-ந்தேதிக்குள் 69 மீனவர்களும் விடுவிக்கப்படாவிட்டால் 1-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை தங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் கூறி இருந்தனர். இந்த நிலையில் பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து பாம்பன் பகுதியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், ராமேசுவரம் மீனவர்களில் ஒரு பகுதியினர் 7-வதுநாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.