மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு

165 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், டெங்கு தாக்கம் உள்ள பகுதிகளில் புகை விசுறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் டெங்கு தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் புகை விசுறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.கிரிசுதனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாமாங்கம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது மழையுடன் கூடிய வானிலை நிலவிவருவதால் சுற்றாடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திவரும் நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்மாதம் 06 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார பிரிவினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.