ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும்

192 0

manoஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும், உரிய முடிவுகள் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் தூதுக்குழு அமைச்சர் மனோ கணேசனை அவரது அமைச்சில் சந்தித்து இன்று உரையாடியது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது.

தற்போது நிகழ்ந்திருப்பது ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

இப்போது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வரும் மனித உரிமை நடவடிக்கை திட்டம், ஜெனீவாவில் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள், பயங்கரவாத தடைத் சட்ட நீக்கம், காணாமல் போனோர் அலுவலக அமைவு, மனோரி முத்தெடுவகம குழுவின் அறிக்கை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை பொறுத்தே ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகள் வழங்கப்படுவதில் இறுதி முடிவு தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க் என்னிடம் தெரிவித்தார்.

இந்நாட்டில் மொழியுரிமை தொடர்பாகவும், சமூகங்களுக்கு இடையே கலந்துரையாடலை ஏற்படுத்துவது தொடர்பாகவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் தேவைப்படுவதாக நான் எடுத்து கூறினேன்.

இதை ஏற்றுக்கொண்ட தூதுவர், இலங்கை அரசுக்கு உதவிடும் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் எடுத்துள்ளது.அமைச்சரின் வெளிப்படையான கருத்துகள் என்னை கவர்கின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றிய உதவி பட்டியலில் மொழியுரிமை, கலந்துரையாடல் ஆகிய விவகாரங்கள் இடம்பெறுவது தொடர்பில் நாம் உங்கள் அமைச்சுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி உரிய முடிவுகளை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.