மட்டக்களப்பு தெற்கு வலய, விவசாய உதவிப்பணிப்பாளர் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது (காணொளி)

280 0

battiமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி, பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் விவசாய திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த கட்டிடத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைக்கப்பட்டிருந்ததுடன், யுத்ததினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.

இந்நிலையில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களம், விவசாயிகளின் நன்மை கருதி 50 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடத்தினை அமைத்துள்ளது.

கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.ஹ{சைன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.