நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் நாட வேண்டும் என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல மாற்று வழிகள் இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதே சிறந்த நடவடிக்கையாக இருக்க வேண்டும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகள் தற்போது இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை விதிக்கும்.
நஷ்டத்திலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அரசு நிதிச் சுமையை குறைக்கவும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.