நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

229 0

நாடாளுமன்றில் கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, இது போன்ற சம்பவங்கள் மீள ஏற்படாதிருக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை நாடாளுமன்றம் ஆரம்பமானதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (07) தம்மை சந்திக்க நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தபோது, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.