கனிய மண் அகழ்விலிருந்து எமது கிராமத்தை காப்பாற்றுங்கள் – புடவைக்கட்டு கிராம மக்கள் கோரிக்கை

293 0

திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கனிய மண் அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புடவைக்கட்டு கிராமம் 1950 ஆம் ஆண்டு முன்னோர்களால் குடியேறி உருவாக்கப்பட்ட 72 ஆவது வருட வரலாற்றைக்கொண்ட ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும். இங்கு தற்போது முஸ்லிம்கள், இந்துக்கள், சிங்களவர்கள் என 450 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்கரையோரங்களில் மணைட் படிவுகள் இருப்பதாகக் கூறி, அவற்றை அகழ்வு செய்ய இங்குள்ள பொது அமைப்புகளிடம் அனுமதி கேட்டு, அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் மேற்கொண்டு கனியமண் அகழ்வை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளில் குறிப்பிட்ட ஒன்றையும் கூட நிறைவேற்றவில்லை.

அதன்பின் தனியார் காணிகளில் மண் அகழத்தொடங்கினர். அப்போது இங்கு 3அடி வரை மண் அகழ்வதாகக்கூறி  கூறிக்கொண்டு 20 அடி வரை அகழ்ந்து உரிய முறைகளில்கூட மீள்நிரப்பவில்லை.இதனால் தற்போது இவ்விடங்கள் வழமையான இடங்களை விட தாழ்நிலப்பகுதிகளாகவே காணப்படுகின்றன.

இது தொடர்பாக கேள்வி கேட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்தனர். இன்றும் கூட அவர்கள் மாதந்த தவனைகளுக்காக நீதிமன்றம் சென்று வருகின்றனர் இவ்வேளையில் பொதுமக்களை பொலிஸார் மூலம் அச்சுறுத்தி சில தனியார் காணி உரிமையாளர்களிடம் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தைகளைக்கூறி அக்காணிகளையும் சூறையாடினர்.

இத்தனையும் பிரதான வீதிக்கும் கடற்கரையோரத்திற்கும் இடைப்பட்ட 100M பகுதியிலேயே நடந்தன எனவும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் றிசாத் (இம்ஜாத்) தெரிவித்தார். இப்போது இந்த கிராமத்தில் 2 கிலோமீற்றர் வரையான பகுதிகளில் கனிய மணல் பரந்து காணப்படுவதால் அவற்றை ஆய்வு செய்து அகழப்போகிறோம் என கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இதற்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளார்கள். மொத்த கிராமமே இந்த 2 கிலோமீற்றர் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த பகுதியில் மண் அகழ்வு நடைபெற்றால் இந்த கிராமம் முற்றாக அழிந்துவிடும்.  எனவே இந்த மண் அகழ்வை தடுக்க சமூக செயற்பாட்டாளர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என குச்சவெளி பிரதேச  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.