கௌரவமான வடமாகாண சபையை தமது வங்குரோத்து அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் – சி.சிவமோகன்

244 0

sivayokanகுறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பயன்படுத்த முயல்கின்றனர்.

அர்த்தங்கள் அற்ற பொருத்தமற்ற கருத்துக்களை வெளியில் கொண்டு வந்து ஊடகத்தில் இடம் பிடிக்க முயல்கின்றனர்.

இதன் மூலம் தமது வங்குரோத்து அரசியலை நடாத்த முன் நிற்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காந்தி சிலை முல்லை நகரில் அமைக்கப்பட்ட போது காந்தி என்ன செய்தார் முல்லைத்தீவுக்கு என ஒரு அடிப்படையற்ற கருத்தை தெரிவித்திருந்த ஒருவர் இதன் மூலம் மகாத்மா காந்தியின் உலகம் ஏற்றுக்கொண்ட அஹிம்சை என்ற கருத்தை கேள்விக்குறியாக்கினர்.

தொடர்ந்தும் காந்தி சிலை உடைப்புக்கு உந்துதலாக இருந்து வன்னி மண்ணின் கௌரவத்தையும் நிர்மூலமாக்கியுள்ளனர்.

மகாத்மா காந்தியின் அகிம்சை எனும் கொள்கையை நேசிக்கும் இந்திய மற்றும் இலங்கை தமிழர்கள் பல இலட்சம் வாழும் இம்மண்ணில் ஒரு சில புல்லுருவிகள் தமது அறிவீனமான கொள்கைகளை இங்கு புகுத்த நினைப்பது அனைத்து மக்களின் மனங்களையும் புண்படுத்தும் என்பதை இவர்கள் இறியாது இருப்பது கவலைக்குரியதே.

மீண்டும் பண்டார வன்னியனுக்கு ஒரு சிலை அமைத்து மல்லாவி நகரமே ஒன்று சேர்ந்து கௌரவமளித்த நேரத்தில் 7 1ஃ2 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்ட சிலையை தமது கமரா தந்திரம் மூலம் சிறுப்பித்து தமது வங்குரோத்து அரசியல் செய்ய முற்பட்டுள்ளனர்.

மது போதையில் இறக்கப்பட்டவர்களின் விதண்டாவாத கருத்துகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருந்தும் ஊடக பிரச்சாரம் செய்ய முற்பட்டது தவறு என்பதை வரலாறு அவர்களுக்கு கற்பிக்கும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்யும் இவர்கள் வெளியிறங்கி மக்களுக்காக சேவை செய்ய முன்வரவேண்டும்.

மக்களுக்கான சேவை ஊடக வெளியீடு மட்டுமே என செயல்படுவதை இவர்கள் தவிர்க்க வேண்டும்.

அனுமதியற்ற கொப்பேகடுவவின் சிலை வவுனியா நகரில் நிமிர்ந்து நிற்கும்போது அதற்கும் பண உதவி செய்தவர்கள் முல்லை நகர வீதிகளில் இராணுவத்தினரின் பெயர் சூட்டப்பட்ட நிலையில் ராணுவ அடையாளங்கள் வீதியில் உள்ள நிலையில் வட மாகாண சபையில் தங்களது புஜங்களை உயர்த்த முடியாதவர்கள் இவர்கள், மத்திய அரசு, அனைத்து அரச திணைக்களங்களும் பங்குதாரர்களாக உள்ள மாவட்ட இணைப்புக் குழுவின் அனுமதியுடன் நாம் செயல்பட்டு வரும்போது தமது வங்குரோத்து அரசியலை காட்ட முனைகின்றனர்.

பொய்களை கௌரவ சபையில் கூச்சம் இல்லாமல் கூறுகின்றார்கள்.

அவர்களது நோக்கம் ஊடகத்துக்கு சூடாக கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே என்பது தெரிய வருகிறது.

2016 பங்குனி மாதம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்கு வந்தபோது மௌனமாக இருந்தவர்கள் இன்று கோடரி தூக்கி அலைகிறார்கள்.

ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்ட அறிக்கைகள் புரிவின்மை இருப்பின் பக்கத்தில் இருப்பவர்களையாவது கேட்கலாம்.

அதையும் விடுத்து முடிவிற்கு வந்தவிடத்தை பொய்களை உரக்க கூறி அசிங்க அரசியல் செய்வதை எப்படி ஏற்க முடியும்.

குழு மாடும் ஒரு நாள் தன் தலையை தானே உடைத்து உயிரை விடும் என்பார்கள்.

அனைத்துக்கும் மக்கள் தீர்ப்பு மீண்டும் வரும் போது பதில்களாக அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.