அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல மாவீரர் நாளினை அனுமதிக்க வேண்டும்- சிவபாதம் குகனேசன்

255 0

இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் இன்று மாலை  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

ஒரே நாடு ஒரே சட்டம்  என்கின்ற அரசின் செயலணி நேற்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடாத்திய சந்திப்பில்  பிரதேசத்திற்குரிய அரசியல்வாதிகளோ மதகுருக்களோ அழைக்கப்படாது. தன்னிச்சியான ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வளவு தூரம் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கும் என்பது நீங்கள் அறிந்திருக்கும் விடயம்.

ஒரு நாட்டினுடைய சட்டத்தை அமுல்படுத்துவது ஒரு சட்டத்தினை மதிக்காதவரிடம் கையளிக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம் எதிர்காலத்தில் இந்த செயலணி எவ்வாறு இயங்கப்போகின்றது என்பது  கேள்விக்குறியான விடயம்.

மூவின மக்களும் வாழ்கின்ற  இந்த தேசத்தில் சிங்கள மக்கள். முஸ்லீம் மக்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள் தமிழ் மக்கள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும் இன்று மூவரை உள்ளடக்கினாலும் ஒரே  நாடு ஒரே சட்டம் என்கின்ற அடிப்படையில் நாங்கள் எங்கள் பிரதேசங்களில் தமிழ்மக்களுக்காக சேவைகளை வழங்குகின்றபோது அது குற்றச்செயலாக கருதப்படுகின்றது.

கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி எதிர்கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை நாங்கள் இங்கு செய்கின்ற சிறு சிறு விடயங்களுக்கும்  சட்டம் எங்கள் மேல் பாய்கின்ற சூழல் உருவாக்கப்படுகின்றது.

தமிழர்களின் எதிர்காலத்தினை எங்களால் கொண்டுசெல்லமுடியாத துப்பாக்கிய நிலை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழில் வைத்து தமிழர் பிரதிநிதிகள் உங்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. எங்கள் அரசியல் பெருந்தகைகளால் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச முற்பட்டபோதும் சந்தர்ப்பங்களை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை தமிழ் மக்களை அவர்கள் ஒதுக்குகின்றார்கள் என்கின்ற உண்மைதான் அங்கு புலப்பட்டு நிக்கின்றது.

அது மட்டுமல்ல அண்மையில் நடந்த கவலைக்குரிய விடயம் எங்களின் சட்ட குழு அமெரிக்க சென்றது. அங்கிருந்து கனடா சென்றார்கள் அங்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களை அந்த குழுவில் இருந்த ஒருசிலர் உதாசீனம் செய்தது மன வேதனையளிக்கின்றது.

தமிழர்களுக்கு என்று பண்பாடு இருக்கின்றது அந்த பண்பாட்டில் இருந்து விலகிவிடக்கூடாது. அவர்கள் சரியானவர்கள் அரசியல் ரீதியாக ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது எல்லோருக்கும் அது சரியாக படாது.

அண்மையில் நாட்டின் பிரதமர் அவர்கள் சுமந்திரன் அவர்களை கட்டித்தழுவுகின்ற படம் வெளியாகி இருந்தது உண்மையில் அவர்களுக்குள் ஏதாது ஒளிவு மறைவு இருக்குமாக இருந்தால் அவர் வெளிப்படையாக வந்து கட்டித்தழுவ அவசியம் இல்லை இதனை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களையும் இங்குள்ள அரசியல்வாதிகளையும் புலம்பெயர் மக்களையும் பிரிக்க வேண்டும் என்ற நோக்குடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது தமிழர்கள்  ஒற்றுமையாக இருந்தாலே எதிர்காலம் மிளிரும்

இன்றைய இந்த நேரத்தில் மாவீரர் வாரங்கள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மாவீரர் நாளினை நினைவிற் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மாவீரர் நாளினை செய்ய அனுமதிக்க வேண்டும் புதைக்கப்பட்ட இடங்களில் மக்கள் சென்று வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.