இலங்கை மகளிர் கிரிக்கெட் தேசிய அணியில் யாழ் வீராங்கனைகள் இருவர்!

197 0

இலங்கை 21 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் தேசிய 20 பேர் கொண்ட அணியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்துள்ளனர்.

இவ்வணியில் இடம்பெற்றுள்ள சானு பாஸ்கரன் மற்றும் மதுரிகா முரளிதாசன் அகிய இருவரும் யாழ் மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

சானு பாஸ்கரன், மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும் (2019 A/L) ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியின் முதலாம் வருட மாணவியாக பயின்று வருகின்றார்.

மேலும், இவ்வணியில் யாழ் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவியான மதுரிகா முரளிதாசனும் தெரிவாகியுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை மகளிர் உதைபந்தாட்ட தேசிய அணியிலும் தெரிவாகி தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியிலும் சானு பாஸ்கரன் (Shanu Baskaran) பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

யாழ் மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி 2019ஆம் ஆண்டு தேசியமட்ட சாம்பியனாகியது. இதன் போது சானு பாஸ்கரன் கல்லூரி சார்பில் விளையாடி இறுதிப்போட்டியில் வெற்றிக்கோலினைப் போட்டார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.

இரு துறைகளிலும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் சானு பாஸ்கரன் 2019 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்.

அவர், விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியை விரும்பி தெரிவுசெய்து, ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக பயின்று வருகின்றார்.