வூஹான் கரோனா நிலவரத்தை ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளர் உயிருக்குப் போராட்டம்

428 0

வூஹான் கரோனா நிலவரத்தை ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் தான் கரோனாவின் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். அங்கு தான் பெருமளவில் கரோனா பரவலும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் இப்போது கரோனா தொற்று காணப்படுகிறது. கரோனா பல்வேறு வகையில் வேற்றுருவாக்கம் பெற்றும் பரவி வருகிறது.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஜேங் ஸான் (38), கடந்த 2020 பிப்ரவரியில் வூஹானுக்குச் சென்றார். கரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக இருந்த அங்கிருந்து அதிகாரிகளுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டார்.

இந்த வீடியோக்கள் சீனாவில் இணையத்தில் வைரலாகின. இதனையடுத்து கடந்த மே 2020ல் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் தான் தவறுதலாக கைது செய்யப்பட்டதாகக் கூறி ஜேங் ஸான் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் அவருக்குக் கட்டாயமாக மூக்கில் ட்யூப் செலுத்தப்பட்டு அதன் வழியாக உணவு வழங்கப்பட்டது. ஷாங்காய் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேங் ஸானின் உடல்நிலை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது.

இதனால், ஜேங் ஸானின் சகோதரர் ஜேங் ஜூ தனது சகோதரியை சர்வதேச பொதுமன்னிப்பு சபை மீட்க வேண்டும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனே சீன அரசு செய்யுமாறு அழுத்தம் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், ஜேங் ஜூ, எனது சகோதரி இந்தக் குளிர் காலத்தைக் கடப்பாரா எனத் தெரியவில்லை. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக ஜேங் ஸானைப் பார்க்கவும் குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.