ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவுள்ளது(காணொளி)

305 0

urயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஊறணி கிராமத்தின் கடற்கரைப்பகுதிக்கான பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நாளைமறுதினம் பொங்கல் தினத்திலன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி வடக்கு ஜெ.249 ஊறணி கிராமத்தின் ஆவளை சந்தியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை இராணுவத்தினால் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற பாதையினூடாக மட்டும் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்ல முடியும் என்றும், ஊறணி கடற்கரையில் 400 மீற்றர் அளவு தூரத்தில் மட்டும், மீனவர்கள் படகுகளை நிறுத்தி கடற்றொழில் செய்வதற்கேற்ப இராணுவத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளாத பலாலி இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கீரிமலை ஊறணி மற்றும் காங்கேசன்துறை 12 கிலோ மீற்றர் கடற்கரைக் பகுதி இராணுவத்தினால் முற்றாக அனுமதிக்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளைமறுதினம் மீள்குடியேறிய மீனவர்கள், ஊறணி கிராமத்தின் ஆவளை சந்தியில் அமைக்கப்பட்ட பாதையினூடாககடற்கரைக்குச் சென்று தொழில் செய்வதற்கேற்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளைமறுதினம் திறந்து வைக்கப்படவுள்ள ஊறணி கடற்கரைக்குச் செல்லும் பாதையை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் முன்னிலையில் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக பலாலி இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் டிசம்பர் 08 தொடக்கம் 14 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வாரத்தில் குறித்த ஊரணி கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் கடற்றொழிலுக்குச் செல்வதற்கு ஆரம்ப கட்டமாக பாதையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டார்.