பதுக்கிய சீமெந்து மூடைகள் மீட்பு

231 0

காத்தான்குடியில் சீமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த சில வர்த்தக நிலையங்களை, நேற்று (08) முற்றுகையிட்ட நுகர்வோர் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள், சுமார் 800க்கு மேற்பட்ட சீமெந்து மூடைகளை மீட்டுள்ளனர்.

அத்துடன், மீட்கப்பட்ட சீமெந்து மூடைகளை அதில் பொறிக்கப்பட்ட விலைக்கே அவ்விடத்திலேயே பொதுமக்களுக்கு விற்பனையும் செய்தனர்.

நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில், இந்த அதிரடி முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது, சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டதுடன், அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த உரிமையாளர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சீமெந்து மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உடனடியாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.