பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ’iPURSE 2021’ சர்வதேச ஆய்வு மாநாடு

159 0

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ’iPURSE 2021’ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. முக்கியத்துவம் மிகுந்த இம்மாநாட்டினை இம்முறை அப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ஏற்பாடு செய்துள்ளது.

இணையவழியாக இடம்பெறவுள்ள ’iPURSE 2021’ இன் பிரதம அதிதியாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது துணைவேந்தரும் மருத்துவருமான பேராசிரியர் சந்த்ரிகா என். விஜயரத்ன கலந்துகொள்ளவுள்ள அதேவேளை, இம்மாநாட்டின்  ஆதார சுருதியுரையை, ஆசியத் திரைப்படவியல் மற்றும் தொடர்பாடற் கோட்பாடுகளில் மிகுந்த புலமைத்துவம் உடையவரும் ஹவாய் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றுபவருமான பேராசிரியர் விமல் திசாநாயக்க ஆற்றவுள்ளார்.  இம்மாநாட்டுக்கான சிறப்பு ஆய்வுரைகள் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜந்த தர்மசிரி, ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மலிக் பீரிஸ் ஆகியோரால் ஆற்றப்படவுள்ளன.

இலக்கியம், பண்பாடு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், கல்வியியல், சுற்றுச்சூழலியல் என பல்வேறு விடயப்பரப்புகளையும் தன் தொனிப்பொருட்களாகக் கொண்டுள்ள ’iPURSE 2021’ சர்வதேச ஆய்வு மாநாடானது, தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் முக்கிய சவாலான கொரோனா பெருந்தொற்று சார் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவை தொடர்பான ஆய்வுகளுக்கும் இடமளிக்கின்றது. மாநாட்டின் தொனிப்பொருட்களுக்கு அமைவாக 571 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.