குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது

213 0

உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையின் காரணத்தால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு, இன்று (03) அறிவித்துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினியால் ஏற்கெனவே ஒருவார கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், இன்று (03) காலை 9.30 அளவில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சட்டத்தரணியூடாக எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளார்.

இதேவேளை, வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தம்மை கைதுசெய்யவதற்கான தடையுத்தரவை வழங்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உயர்நீதிமன்றம், இன்று (03) தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடல் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதற்கமையவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.