’மதங்களுக்கு எதிரான வன்முறைகள் ஒற்றுமையை சீர்குலைக்கும்’

151 0

மதங்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் எதிர்பாராத விதமான பாரிய விளைவுகளுக்கு வித்திட்டு ஒற்றுமையை சீர்குலைக்கும் என, பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மன்னார் – முசலி பிரதேசத்தில் உள்ள பாசித்தென்றல் குளத்தடி பாலைமரத்தடிப் பிள்ளையார் கோவிலில் காணப்பட்ட பிள்ளையார் திருவுருவம் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 10 மாதங்களுக்கு முன்னர் மத வெறியர்களால் உடைத்தெறியப்பட்ட முசலி-பாலைமரத்தடிப் பிள்ளையார் திருவுருவம் மீண்டும் 07ஃ10ஃ2021 அன்று மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக உருத்திர சேனை அமைப்பால் சிலாவத்துறை விகாராதிபதியின் பங்கேற்புடன் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை, காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடாகும் எனவம், அவர் தெரிவித்துள்ளார்.

‘வடக்கில், அண்மைக் காலமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்து கோவில்களில் திட்டமிட்டு இடிக்கப்படுவதும், தாக்கப்படுவதும்,சிலைகள் திருடப்படுவதும் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றது.மதங்களுக்கு எதிராத வன்முறைகள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும்’ எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது