சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சில வரையறைகளை விதிப்பு

270 0

poilice-11-01-2017பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது.

எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே தகவல்கள் வெளியிடப்பட இருப்பதால் இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

பொலிஸ் ஊடக கொள்கை வெளியிடும் நிகழ்வு நேற்று சட்டம் ஒழுங்கு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, ஊடகங்களுக்கு செய்திகளை முறையாக அனுப்பவே புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கல்ல எனவும் தெரிவித்தார்.

கொள்கை ரீதியான விடயங்கள், சர்ச்சைக்குரிய விடயங்கள், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு செய்திகளை வெளியிடும் என்றும், போதைப்பொருள் சட்டவிரோத மதுபானம், முக்கியமான கைதுகள், குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்ட துரித முன்னெடுப்புகள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த உயிர்ப்பாதுகாப்பு செயற்பாடுகள், பாரிய குற்றங்கள், பாரிய விபத்துகள், இயற்கை அனர்த்தங்கள், பொலிஸ் சேவை தொடர்பான விடயங்கள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட வீரதீர செயல்கள், கைது நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வழங்கிய விசேட ஒத்துழைப்பு என்பன தொடர்பிலேயே இனிவரும் காலங்களில் செய்தி வெளியிடப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயகொடி தெரிவித்தார்.