பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

309 0

201701110037141645_pongal-holidays-has-no-connection-to-central-government_secvpfபொங்கல் திருநாள் கட்டாய விடுமுறை தினமாக தேர்ந்தெடுக்கப்படாததில், மத்திய அரசாங்கத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு வந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை பற்றிய சர்ச்சை வேகமாக பரவி வருவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

உடனே அவர் அந்த இடத்தில் இருந்தபடியே பிரதமரின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இதுகுறித்து விவரம் கேட்டறிந்தார்.

பின்னர், பொங்கல் விடுமுறை சர்ச்சை குறித்து வெங்கையா நாயுடு விளக்கம் அளித்து கூறியதாவது:-

பொதுவாக டெல்லிக்கு வெளியே உள்ள மத்திய அரசு நிர்வாக அலுவலகங்களுக்கு 17 நாட்கள் விடுமுறை நாட்களாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதில் குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்தநாள், புத்த பூர்ணிமா, கிறிஸ்துமஸ், தசரா (விஜயதசமி), தீபாவளி, பெரிய வெள்ளி, குருநானக் பிறந்தநாள், ரமலான், பக்ரீத், மகாவீர் ஜெயந்தி, முகரம், மிலாதுநபி ஆகிய 14 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்கள் ஆகும்.

இந்த 14 நாட்கள் போக மீதமுள்ள 3 நாட்களை தசராவுக்கு கூடுதலாக ஒருநாள், ஹோலி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ரதயாத்திரை, ஓணம், ஸ்ரீபஞ்சமி, விஷூ அல்லது உகாதி, வைசாகி போன்ற 12 நாட்களில் இருந்து மாநில தலைநகரங்களில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

தேவைப்பட்டால் மற்ற மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து ஆலோசித்தும் முடிவு எடுக்கலாம். அதன்படி, அந்தந்த மாநிலங்களில் மேலும் 3 நாட்கள் எந்தெந்த நாட்கள் விடுமுறை நாட்கள் என முடிவு செய்யப்படும்.

இதுதவிர, வழக்கமாக உள்ளூரில் முக்கியத்துவம் தொடர்பான பண்டிகைகளை கருத்தில் கொண்டு விருப்ப விடுமுறை பட்டியலுக்காக மாநில தலைநகரங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழுக்கள் 9 பண்டிகைகள் பட்டியலை தயாரிக்கும்.மாநில தலைநகரங்களில் உள்ள இந்த மத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழுவுக்கு, அந்தந்த மாநில அரசாங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்து ஆலோசித்து ரமலான், முகரம், மிலாதுநபி போன்ற பண்டிகைகளின் தேதியை மாற்றுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 19-ந் தேதி வருகிறது. சில மாநிலங்களில் இந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக ‘நரகா சதுர்த்தசி நாள்’ என்று கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற இடங்களில் அந்த மாநிலம் அந்த நாளை கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்கும்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை நாளாக அறிவிப்பதில் ஆட்சேபனை இல்லை.

மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் இதேபோல் ஒரு ஆண்டில் குடியரசு தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்தநாள் ஆகிய 3 கட்டாய விடுமுறை நாட்களை சேர்த்து 16 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்களாக அனுசரிக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களாக அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்யும்.

இந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதியே 2017-ம் ஆண்டில் மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்கள் பட்டியலை மத்திய அரசாங்கத்தின் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பென்சன் அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.சென்னையில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு 12 நாட்கள் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பொங்கல் தினம், விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமையில் வருகிறது என்பதால் இப்படி தேர்ந்தெடுக்காமல் இருந்திருக்கலாம்.மத்திய அரசாங்கத்துக்கோ, அதில் உள்ள பணியாளர் மற்றும் ஆணையத்துக்கோ தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு பொங்கலை கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்க தேர்ந்தெடுக்காமல் இருந்ததற்கு எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், பொங்கல் விடுமுறை குறித்த சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்த முறை பொங்கல் சனிக்கிழமை வருவதால், சனிக்கிழமை ஏற்கனவே விடுமுறை நாளாக இருப்பதால் விடுமுறைக்கே விடுமுறை அளிக்க முடியாது. எனவே அந்த பட்டியலில் இருந்து எடுத்து, ஏற்கனவே விடுமுறை இருப்பதனால் பொங்கலுக்கான விடுமுறை இன்னொரு நாள், இன்னொரு பண்டிகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று ஊழியர்களுக்கு உதவுவதற்கு தான் இந்த பட்டியல் இப்படி செய்யப்பட்டிருக்கிறது.

வேண்டுமென்றே இன்றைய தினம் ஏதோ மத்திய அரசு திடீரென்று பட்டியலில் இருந்து எடுத்துவிட்டது போலவும், திடீரென்று மாற்றம் கொண்டுவந்துவிட்டது போலவும் தமிழர்களுக்கு எதிராக நடப்பதுபோலவும், ஒரு மாய தோற்றத்தை வேண்டும் என்று உள்நோக்கத்தோடு பல கட்சிகளும் செய்கிறது.

சகோதரர்கள் அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களும் உண்மைநிலையை உணர்ந்து எடுத்து சொல்லி இருக்கிறார்கள். ஆக, வேண்டுமென்று இல்லாத ஒன்றை இருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள். தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். இவர்கள் வேண்டும் என்றே போராட்டம் செய்ய வேண்டும் என்பதற்காக போராடுகிறார்களே தவிர, எந்த விதத்திலும் இதில் மாற்றம் ஏற்படவில்லை. எப்பொழுதுமே உள்ள நடைமுறை தான்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.