மோடியை போல் நடிக்க தெரிந்தால் அரசியலில் வெற்றி பெறலாம்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

157 0

காமராஜர், நேரு, இந்திரா என்று எத்தனையோ தியாகம் செய்த தலைவர்கள் நேர்மையான அரசியலால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

தமிழக காமராஜ்,சிவாஜி பேரவை சார்பில் காமராஜ், சிவாஜி, எச்.வசந்தகுமார் நினைவு முப்பெரும் விழா தி.நகர். பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி. சுதந்திர போராட்ட தலைவர்களையும், வரலாற்றையும் தலைமுறைக்கும் நினைவு படுத்தியவர். கட்டப்பொம்மனையும், வ.உ.சி.யையும், சிவாவையும் பார்க்காதவர்களையம் தன் நடிப்பு திறமையால் பார்க்க வைத்தவர்.

நடிப்பால் மக்களை கட்டிப்போட்ட சிவாஜியால் அரசியலில் மக்கள் முன் நடிக்க தெரியவில்லை. அதனால் தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.

காமராஜர், நேரு, இந்திரா என்று எத்தனையோ தியாகம் செய்த தலைவர்கள் நேர்மையான அரசியலால் மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

ஆனால் இன்று நிலைமையை பாருங்கள். மோடி மக்களிடம் நடித்தே ஏமாற்றுகிறார். அவரைப் போல் நடிக்க தெரிந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நினைக்க தோன்றுகிறது.

சினிமாவில் காட்சிக்காக பொய், புரட்டுகளை சொல்லி நடிப்பார்கள். ஆனால் கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் நடித்தே மக்களை ஏமாற்றி கொண்டிருப்பவர் மோடி.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., நாசே.ராமச்சந்திரன், ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்தழகன், கொண்டல்தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.