புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவௌ பகுதியில், நேற்று (16) இரவு; இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சாலியாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் அருன பிரிய (வயது 50) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சனிக்கிழமை இரவு, நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து கடமையை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் தனது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அநுராதபுரம் பகுதியில் இருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்று, பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
இதன்போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில், சாலியாவௌ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

