நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

255 0

download-4நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவையை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப் போவதில்லை எனவும்; இலவச சுகாதார சேவையை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வழங்குவோம் எனவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

சீனாவின் உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர வர்த்தக வலையமொன்றும்; உருவாக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மொனராகலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் வறுமை நிலைக்கு தீர்வு காணப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் அவரது பிறந்த நாளுக்கு பதாதைகளை விளம்பரப்படுத்தி துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் திறந்து வைத்தது மாத்திரமே என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார். எனினும், இந்த பொருளாதார நிலையங்களை எவ்வாறு கொண்டு நடாத்துவது என்பது தொடர்பில் ஆராயவில்லை என அவர் கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு தற்போது உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் நடவடிக்கை என கூறிய அமைச்சர், நாட்டிற்கு தேசிய கொள்கையொன்று இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள இனவாதிகள் அதிகமாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே பேசுகிறார்கள் என குறிப்பிட்டுள்ள அமைச்சர், தமிழர்கள் மத்தியிலும் இவ்வாறானோர் இருக்கின்றனர்கள் என கூறியுள்ளார்;.

இந்த இனவாத அரசியல் முறை நாட்டை அழித்துவிட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.;