உயிலங்குளத்தை புனரமைக்குமாறு வலியுறுத்தல்

213 0

முல்லைத்தீவு – துணுக்காய் கமநல சேவைகள் திணைக்கத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை   புனரமைப்பதற்கான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்திருப்பதாக, கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உயிலங்குளத்தில் 63 பயனாளிகள்  139  ஏக்கர் வயல் காணிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

தற்போது குளத்தைப் புனரமைப்பதற்கான மதிப்பீடுகள் ஆரம்பத்தில்  செய்யப்பட்டன எனத் தெரிவித்த அவர், அதற்கென,  10 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது எனவும் ஆனால், தற்போது அதிகரித்த அளவில் தேவை காணப்படுகின்றது எனவும் கூறினார்.

‘இதேவேளை, குறித்த அணைக்கட்டின் ஊடாக துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட விவசாய கிராமங்களுக்கான பாதையாக  காணப்படுகின்ற நிலையில், குளத்தின் அணைக்கட்டின் ஊடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, அணைக்கட்டுக்கு கீழான பகுதியில் வீதி அமைக்கப்படும் போது தான் குளத்தைப் புனரமைக்க கூடியதாக இருக்கும்’ என்றும், அவர் தெரிவித்தார்.