கொவிட் தொற்றாளர்களுக்கு Tocilizumab என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது- பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி

298 0

கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுகின்ற (Tocilizumab) என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்தார்.

குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும், இந்த மருந்து கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமான இரண்டாவது மருந்தாக உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்துள்ளது என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த (Tocilizumab) மருந்து கொவிட் நோய்க்காக தயாரிக்கப்பட்ட மருந்து அல்ல. இது மூட்டுவாதத்திற்காக தயாரிக்கப்பட்ட மருந்தாகும். அத்துடன், தற்போது கொவிட் நோயை தடுப்பதற்கு உள்ள ஒரு சிறந்த மருந்து தடுப்பூசியே என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஒருவர் சளி இருமல் போன்றவற்றினால் பீடிக்கப்படுமிடத்து, அவர் கொவிட் தொற்றாளர் என யூகித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.