23 மாதங்களில் நல்லிணக்கம் எங்கே? – அசாத் சாலி

268 0

download-1நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமையை இட்டு தான் வெட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அசாத் சாலி, லண்டன் நகரிலுள்ள பீ.பீ.சி தலைமை அலுவலகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆட்சியிலுள்ள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய போதிலும், தமக்கு நியாயம் நிலைநாட்டப்படவில்லை என்பதனால், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

23 மாதங்களில் நல்லிணக்கம் எங்கே எனவும், நல்லிணக்கம் காணப்பட்டால் நாடு இன்று இவ்வாறு காணப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று இவ்வாறான கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் குறித்து தானே கருத்து வெளியிட்டதாகவும், அதன்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சட்டத்தை கையில் எடுக்க தேவையில்லை என தாம் கூறியதாகவும், பொலிஸார் சுயாதீனமாக பணியாற்றுவார்கள் என தாம் கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், எங்கே அவை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயங்களை எண்ணிப்பார்க்கின்றபோது தனக்கு வெட்கமாக காணப்படுகின்றது என கூறிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், தன்னை பாதணியால் அடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.