முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும்- ஏ.மரியராசா(காணொளி)

277 0

mullaiமுல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள், தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தர வேண்டும் என, முல்லைத்தீவு கடற்தொழிலாளர்  சங்கங்களின் சமாசத்தின் தலைவர் ஏ.மரியராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நல்லதண்ணீர் தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரையான 73 கிலோ மீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளைக் கொண்ட கடற்பகுதிகளிலும், நாயாறு வட்டுவாகல் ஆறு உள்ளிட்ட சிறுகடல் பகுதிகளிலும் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தொழிலான கடற்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வட்டுவாகல் ஆறு கொக்கிளாய் ஆறு ஆகிய சிறுகடல் பகுதிகளில் அனுமதியற்ற சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுவதனால் தமது தொழில் நடவடிக்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முறையற்ற வகையில் கரை வலைப்பாடுகளுக்காக அனுமதிகள் வழங்கப்பட்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலைப் பாடுகளை இழுத்தல், டைமைற் பாவித்து மீன்பிடித்தல். வெளிச்சத்தை பயன்படுத்தி மீன்பிடித்தல், நிபந்தனை மீறிய அட்டைத்தொழில்கள் என பல்வேறு சட்டத்திற்கு முரனான தொழில் நடவடிக்கைகள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிப்பதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்  சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோதும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டிலாவது முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்ளுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தித்தரப்படவேண்டும் என்று சமாசத்தில் தலைவர் ஏ.மரியராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தும் ஏற்படுமாக இருந்தால் மீனவர்கள் ஒன்றிணைந்து சாத்வீக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.