எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!!

477 0

india-srilanka-flag-1இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பில் 2017 ஜனவரி 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை குறித்து கடந்த காலங்களில் பேசப்பட்டபோதும் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.

இந்த உடன்படிக்கையினால் இலங்கைக்கு நன்மைகள் இல்லை என்று இலங்கையில் கூறப்பட்டு வருகிறது. எனினும் உடன்படிக்கையினால் இரண்டு நாடுகளுக்கும் நன்மையிருப்பதாக இந்தியா கூறிவருகிறது.

இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு டிசம்பருக்குள் உடன்படிக்கையை கைச்சாத்திட வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியபோதும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இரண்டு தரப்பும் திருப்பதியடையும் வரை காலக்கெடு தேவையில்லை என்று தமது கொழும்பு விஜயத்தின்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.