ஜேர்மனி வெள்ளப் பெருக்கில் சிக்கி மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

459 0

ஜேர்மன் நாட்டை அண்மையில் உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட நீர் ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற 36 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெளியே ஓடிவந்தார் என்றும் அச்சமயம் வெளியே பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட கார் ஒன்றுடன் மோதுண்ட அவர் பின்னர் காணாமற்போனார் என்றும் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர்.

வெள்ளப் பகுதி ஒன்றில் இருந்து மறு நாள் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கையில் பச்சை குத்தி இருந்தமையால் அதன் மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது என்ற தகவலை ஜேர்மன் தமிழ் வட்டாரங்கள் வெளியிட்டன.

ஜேர்மனியில் வெள்ளம் பாதித்த மேற்குப் பகுதிகளில் பல தமிழர்களும் சிக்குண்டனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. எனினும் அங்கு நேர்ந்த ஓர் உயிரிழப்பு பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட முதல் தகவல் இதுவாகும்.

ஜேர்மனியின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இந்த இயற்கை அழிவில் சிக்கிக் காணாமற் போன பலரது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.பருவ மாற்றத்தால் ஏற்பட்ட இந்த இயற்கையின் சீற்றம் அங்கு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.