முஸ்லிம்கள் பொதுச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய ஏற்பாடு!

157 0

இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமண பதிவு கட்டளை சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பார்களாயின், அதற்கான சட்டஏற்பாடுகளை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, குடியியல் சட்டக்கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையில் திருத்தம் செய்ய நீதியமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணங்களில் ஏதேனும், ஒன்றுக்காக பிரஜைகளை ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும்,  முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் மண நீக்கச் சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்குவதற்கான தேவையை பல்வேறு மகளிர் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் கோரியுள்ளனர்.

இதன்காரணமாக, இலங்கைப் பிரஜைகளின் திருமணமும், விவாகரத்தும் நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணத்தினையும் விவாகரத்தையும் நிர்வகிக்கும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பார்களாயின், அவர்களுக்கு குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.