சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல மாதத்தில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அமாவாசை 9-ம்தேதி வருகிறது. இதையடுத்து இன்று முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை.
மலையடிவாரத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
அமாவாசை சிறப்பு பூஜை ஏற்பாடுகளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

