மன்னார் தாழ்வுப்பாட்டு கிராம மீனவர்கள் வீதி மறியல் போராட்டம் -மீனவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

289 0

unnamed-6மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிறந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் சுருக்கு வலையினை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் இன்று காலை முதல் தாழ்வுபாட்டு கிராமத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக குறித்த கிராமத்தில் இருந்து மன்னார் நகருக்குச் செல்லும் அரச போக்குவரத்துச் சேவைகள் நீண்ட நேரம் தடைப்பட்டிருந்தது.

மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் இருந்து இன்று காலை சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடி கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் இடை மறித்ததோடு சுருக்கு வலையினை பயண்படுத்தி மீன்பிடிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்ததோடு, மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதியை மறுத்துள்ளனர்.

சுருக்கு வலையில் மீன்பிடிக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் எனவே குறித்த மீன்பிடி முறமையினை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பட்ட முறையில் தடைசெய்யப்பட்ட தொழில் முறமைகளை பயண்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும்,அவற்றை நிறுத்தினால் தாங்கள் சுருக்கு வலையினை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

எனினும் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதி மறுத்ததன் காரணத்தினால் ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது கிரமத்திற்குள் வந்து வீதியை மறித்து வீதித்தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வீதியில் டயர்களை எறித்தும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதன் போது மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர்.

எனினும் அரச பேரூந்துகளை மறித்து வைத்து நீண்ட நேரமாக மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக தற்போது பண்டிகைக்காலம் என்பதினால் மீனவர்களின் வாழ்வாதாரம் சுருக்கு வலை தொழிலையே நம்பியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறுபட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறமைகளை பயண்படுத்தி மீனவர்கள் இன்று வரை மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் தொழிலை நிறுத்தாது சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் எமது தொழிலை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுய நலத்துடன் செயற்பட்டு மீனவர்களுக்கிடையில் பல்வேறு மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருந்த போதும் மீனவர்கள் தமது போராட்டத்தை கைவிடாத நிலையில் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கையில் வைத்திருந்த மண்னெண்ணையை தனது தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நிலையில் ஏனைய மீனவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் எவரும் வருகைதரவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் உரையாடினர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அருட்தந்தை ஆகியோர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியும் எனவும் அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

unnamed-7 unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed