ராமமோகன ராவிடம் இன்று விசாரணை: அமலாக்கத்துறை நடவடிக்கை

257 0

201612231135108270_tn-former-chief-secretary-rama-mohana-rao-investigation_secvpfமுன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், தொழில் அதிபர் சேகர்ரெட்டியுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டதை வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

கடந்த 8-ந்தேதி சேகர் ரெட்டியை சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர், அவரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். பிறகு சேகர் ரெட்டி கைதானார்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதே நேரத்தில் அவரது மகன் மற்றும் உறவினர்களின் 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் ராம மோகனராவின் வீட்டில் இருந்து ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராம மோகனராவின் மகன் விவேக் வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது வீடுகளில் நேற்றும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலக அலுவலகம், மகன் விவேக் வீடு, அவரது 6 அலுவலகங்கள், நண்பர் அமலநாதன் வீட்டில் சிக்கிய நகைகள், பணம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சிக்கிய தங்கம், ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிடும் பணியைத் தொடங்கி உள்ளனர். ரொக்கப் பணத்தை வங்கி அதிகாரிகள், பணம் எண்ணும் எந்திரங்கள் உதவியுடன் செய்து வருகிறார்கள்.

அது போல தங்க, வைர நகைகள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளதால் அவற்றை நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கணக்கிட்டு வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட நகை மதிப்பீட்டாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகை, பணத்தை மதிப்பிடும் பணி இன்று முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக இந்த நகைகள், பணம் எப்படி வந்தது? எத்தகைய வருவாய் மூலம் சம்பாதிக்கப்பட்டது? என்ற விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ராமமோகன ராவிடமும் அவரது மகன் விவேக்கிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

அந்த விசாரணை தகவல் கள் மற்றும் உறவினர்களி டம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையாக தயாரித் துள்ளனர். அந்த அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறையிடம் வருமான வரித்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.

இதன் காரணமாக ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வர உள்ளனர். ராம மோகனராவும் அவர் குடும்பத்தினரும் முறைகேடான வழிகளில் எப்படி பண பரிமாற்றம் செய்தனர் என்ற விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்துவார்கள்.

ராமமோகன ராவின் தொலைபேசி உரையாடல்கள் மிக முக்கியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. சேகர் ரெட்டியுடன் போனில் அவர் பேசியவை அனைத்திலும் பல நூறு கோடி ரூபாய் பண பரிமாற்ற தகவல்களாக பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத் துறைக்கு இது மிகவும் வலுவான ஆதாரமாக கருதப்படுகிறது.

ராமமோகன ராவின் கம்ப்யூட்டரிலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாம். மேலும் ரகசிய அறையில் கிடைத்த ஆவணங்களும் மலைக்க வைப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது.எனவே ராமமோகன ராவை நேரில் அழைத்து விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இன்றே அந்த விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது. ராமமோகன ராவ் மகனிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

ராம மோகனராவ், விவேக் ஆகியோர் முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ராமமோகன ராவ் மீது விசாரணை பிடி இறுகியுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த வி.ஐ. பி.க்கள் இன்னும் கலக்கம் தீராமல் உள்ளனர்.

இதற்கிடையே ராமமோகன ராவ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 30 லட்சத்தில் ரூ.23 லட்சத்துக்கு புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ராமமோகன ராவுக்கு இவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

அதுபோல ரூ.5 கோடி தங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புக்கு தங்கக்கட்டிகளாக பிடிபட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதுபோல சேகர்ரெட்டி வீட்டில் இருந்த 34 கோடி ரூபாய் புதிய நோட்டுகளுக்கும் ராம மோகன ராவ் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமமோகன ராவ் மற்றும் அவர் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அமலாக்கத் துறை விசாரணைக்கிடையே சி.பி.ஐ. விசாரணையும் தீவிரமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் வி‌ஷயத்தில் உண்மையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. தீவிரமாகியுள்ளது.முறைகேடாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றது உறுதியாகும் பட்சத்தில் ராமமோகன ராவ் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.