தாக்கி யழிப்பதனால் அழியாது தமிழரது மனவெளியில் மறையாது-மா.பாஸ்கரன். யேர்மனி.

587 0

எம் உள்ளத்துள் நிறைந்தோரே!
மானத் தமிழினத்தின் வீர முரசறைந்து
வீறுநடை நடந்து விதையான மக்களை
மறைந்தோராய் எண்ணாதீர்
எம் உள்ளத்துள் நிறைந்தோராய்
எம் உள்ளே வாழ்கின்றார் அறிவீரோ!

நினைவுத் தூபிகளாய்
நிமிரந்துள்ள நினைவுக் குறியீடுகளே
சிங்களத்தின் சிரசறைந்து சிதைத்து
நெஞ்சைக் கலங்கடித்து கரைப்பதனால்
பாம்பை காண்பதுபோல் காண்கின்ற
கலங்கிய மனநிலையால் தாக்குகிறார்!

தாக்கி யழிப்பதனால் அழியாது
தமிழரது மனவெளியில் மறையாது
மானிடத்தை மதிக்காத சிங்களத்தின்
இனக்கொலையின் படிமங்களாய்
எம்முள்ளே கலந்து படிந்துள்ளார்!

தன்னிலை தாளாத தர்மத்தின் ஒளியாக
முள்ளிவரை தொடர்ந்த எங்கள்
முத்தான உறவுகளின் மூச்சிருக்கு எம்முள்ளே!
எம்மவரின் மூச்சை அடக்கி அழித்துவிட்டு
ஆங்காங்காங் புதைகுளியுள் புதைத்துவிட்டு
அதன்மேலே புத்தரின் சிலைவைத்துப்
பூத்தூவிடும் புத்தரது புதல்வர்களே
உங்களுக்குத் தகுதியுண்டா புத்தருக்குப் பூத்தூவ!

எங்கள் உறவுகளைப் பூத்தூவி வணங்குதற்கு
தடைகளிடும் சிங்களமே தண்டனை உனக்குண்டு
உலகத்தில் இன்றுனக்குத் தலைசாய்த்துக்
கரம்கோர்த்துக் கை தூக்கிவிடும் நட்புகளே
நாளையுன்னைக் கைவிட்டு ஓடுகின்ற வேளைவரும்!

நீதிவழிநின்று நெருப்பில் தமையீந்தவரின்
ஆத்ம பலமெழுந்து உன் அத்திவாரத்தையே
அறிவு வழிசென்று அசைத்து நொருக்கின்ற
அறச்செயலால் உன் அரியணையே சாய்ந்துவிழும்!

அழகான வாழ்வமைத்து சிறப்போடு வாழ்ந்தோரை
சிதைத்தழித்துப் பெருக்கின்ற சிங்களமே
பொய்களால் நிறைந்துவிட்ட பேயரசின்
ஆயுளென்றும் நின்று நிலைப்பதில்லை
இது உலகு கண்டுவரும் இயல்பான நிலையாகும்!

அழித்துப் புதைத்துவிட்டு அச்சத்தை விதைத்து
அறுவடை செய்வதாய் எண்ணாதே சிங்களமே
வினை விதைக்கின்றாய் விளைவுகளை நீயொருநாள்
அறுவடையாய் காண்பதற்கு உன்னைத் தயார்படுத்து!

உலகப் பரப்பெங்கும் உலவுமெங்கள் இளையோரின்
அறிவும் செயலும் அசைக்கும் இவ்வுலகினையே
அப்போது உனக்குப் பேசுதற்கு வாய்ப்பிராது
செய்வதற்கு மட்டுமே சிந்திக்க வேண்டிவரும்
அப்போது தமிழர்களின் முறையாக
உன் முன்விரியும் காட்சியிலே கரைவாய் நீ!

நீரின்றி உணவின்றி நின்றவர்கள் மீதினிலே
கந்தகக் குண்டுகளால், கொத்துக்குண்டுகளால்
கொலை வெறியாட்டமிட்ட கொடுஞ்செயலின்
அறுவடையாய் தண்டனைகள் சூழ்கையிலே
எங்கள் பெருவலியின் துயர் புரியும்!

எம்முள்ளத்துள் நிறைந்தோரின் நினைவுகளே
எம்மை வழிநடத்தும் நிலையான தடமாகும்
உங்கள் தடம்மீது ஒருகணம் ஒளியேற்றி
பெரும் தீயாக மீண்டும் நாம் நிமிர்கின்றோம்
எம் தேசத்தை மீட்டெடுத்து உங்கள்
ஈகத்தின் பயனாக எம்மின இருப்பைக் காத்திடவே!

மா.பாஸ்கரன். யேர்மனி