ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி

261 0

201612211157410779_germany-releases-berlin-attack-suspect-as-isis-claims_secvpf-1ஜெர்மனியில் 12 பேர் பலியான விபத்தில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றியது ஐ.எஸ். தீவிரவாதி என தெரிய வந்துள்ளது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு கூடிய ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த ஒரு லாரி கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்தது. கடைகள் மீது மோதியது. அதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பலரின் உடல்கள் நசுங்கின.இச்சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 24 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஜூலை 14-ந்தேதி நைஸ் நகரில் பிரெஞ்ச்ரிவைராவில் நடந்தது போன்று இருந்தது. அதில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் கூட்டத்துக்குள் லாரியை ஏற்றி 86 பேரை கொன்றான். அதே போன்று இச்சம்பவமும் நடந்துள்ளது. ஆனால் இது விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த லாரியை ஓட்டிய 23 வயது வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவன் பாகிஸ்தானில் இருந்து ஜெர்மனிக்கு அகதியாக வந்து தஞ்சம் அடைந்தவன் என தெரியவந்தது. அவன் லாரியை ஏற்றி பொதுமக்களை கொன்றதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் விபத்து என முடிவு செய்து அவனை போலீசார் விடுவித்தனர்.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ‘அமாப்’ என்ற செய்தி நிறுவனம் ஒரு தகவல் வெளியிட்டது. அதில் ‘ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வீரன் பெர்லினில் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறான். அமெரிக்க கூட்டணி நாடுகளை சேர்ந்த மக்களை குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க நட்பு நாடான ஜெர்மனி, ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இத்தகவலால் லாரியை ஏற்றிய பாகிஸ்தான் அகதி ஒரு ஐ.எஸ். தீவிரவாதி என தெரிய வந்துள்ளது. எனவே அவனை மீண்டும் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜெர்மனி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பொதுமக்கள் மீது ஏற்றப்பட்ட லாரியில் டிரைவர் இருக்கை அருகே ஒருவர் பிணமாக கிடந்தார். போலந்து நாட்டை சேர்ந்த அவர் லாரி டிரைவராக இருக்கலாம். அவரை சுட்டுக் கொன்று விட்டு லாரியை கடத்தி வந்து தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

வருகிற 2017-ம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் 4-வது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி பல லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனியில் அடைக்கலம் கொடுத்தார்.இந்த நிலையில் ஜெர்மனியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.