தமிழ் மக்கள் தமது சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் – சந்திரசேகரன்

306 0

santhirakanthan-300x226தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாச்சார மண்டபம் தொடர்பாக உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய கலை கலாச்சாரத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் அமைக்கப்படுகிறதே தவிர இந்த நாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கோ அல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது தமிழ் மக்களின் கலை, இலக்கியம் என்பன மழுங்கடிக்கப்பட்டு, இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் சினிமா, இலக்கியம் என மொத்தத்தில் இந்தியாவின் பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்பாகவே இன்று வடக்கு மாகாணம் மாறிக்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களை இப்படியே செயலற்றவர்களாக மாற்றிவிட்டு, தமது ஆக்கிரமிப்புக்களை முன்னெடுக்கும் ஒரு நோக்கமாகவே தற்போது இக்கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்கெதிராக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு ஒரு கருத்தியலைக் கொண்டுவரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் யுத்தத்தை நிறுத்தவேண்டுமென மேற்குலக நாடுகள் விரும்பியபோதும் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமென இந்தியா கோரியமை தொடர்பான தகவல்களும் தற்போது வெளிப்பட்டு வருகின்றதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.