முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலைசெய்வதற்கு சிறீலங்கா வருகைதந்த சீனர் கைது!

315 0

chinese-mafiaகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்றவரும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவருமான சீனர் ஒருவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சிறீலங்காவின் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நி மா சி ரென் என்ற சீனரே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பிலுள்ள முன்னணி கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியிருந்தார்.

முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றவே தாம் சிறீலங்கா வந்ததாக குறித்த சீனர் தெரிவித்திருந்த போதிலும், அவர் சீனர்களால் நடாத்தப்படும் கசினோ நிறுவனத்தில் பணியாற்றிவந்தார் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இவரின் சுற்றுலா நுழைவு விசா ஏற்கனவே காலாவதியாகியிருந்ததும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இவர் குறிபார்த்துச் சுடும் பயிற்சி பெற்றவர் எனவும், அத்துடன் பல முக்கிய பிரமுகர்களைக் கொல்லும் மாபியாக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர், சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லம், அலரி மாளிகை மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் மொனாச், கிரெஸ்காட் அடுக்கு மாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு மிக அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தங்கியிருந்துள்ளார்.

நி மா சி ரென்னின் மனைவி, சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீனர், தென்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளுடன் கிரமமான தொடர்பில் இருந்துள்ளார்.

இவர் சிறிலங்காவில் தங்கியிருந்ததற்கான நோக்கத்தை கண்டறிவதற்கு விசாரணையாளர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன், இவருடன் தொடர்பில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று எதிரணி அரசியல்வாதிகள் சிலர் கூறி வரும் நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் சீன சூட்டாளர் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சீனர், நுழைவிசைவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நாளை நாடுகடத்தப்படவுள்ளார். இவர் தற்போது, மீரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சதித் திட்டங்கள் எதனுடனும் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்து, நாடு கடத்தப்பட்ட பின்னரும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.