மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை – சஜித் தரப்பு!

388 0

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை நடவடிக்கையாகவே மாகாண சபை கொண்டுவரப்பட்டது.

தற்போது 40 வருடங்கள் வரை கடந்துள்ள நிலையில், அதன் நன்மை தீமை குறித்து, கருக்களை முன்வைக்க முடியும்.

இந்த காலகட்டத்தில் அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து, அதனை நிரந்தரமாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை எடுப்பதே தவிர, அதனை நீக்குவதற்கு நாம் ஒருபோதும் இணங்குவதில்லை.

மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளுக்கு, மாகாண சபையின் மொத்த செலவில் 0.5 வீதமே செலுத்தப்படுகின்றது.

அனைத்து ஏனைய செலவுகளும், மாகாண சபையின் ஊடாக, கல்வி, சுகாதாரம், வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்குத் தேவையான முன்னுரிமையான திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.